அண்ணாமலையான்
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்,
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்,
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்,
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகலப்,
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப், பிறங்கு ஒளிசேர்
விண்ணாகி மண்ணாகி, இத்தனையும் வேறாகிக்,
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்,
பெண்ணே, இப்பூம்புனல் பாய்ந்து ஆடு, ஏலோர் எம்பாவாய்.
பெண்ணே! திருவண்ணாமலையில் உறையும் பெருமானின் திருவடித் தாமரைகளைச் சென்று வணங்கும்போது, தேவர்களின் மகுடங்களில் விளங்கும் பலவகையான இரத்தினங்களும் தங்கள் பிரகாசத்தை இழந்து மழுங்கிக் காண்பது போலவும், எங்கும் நிறைந்திருக்கின்ற கதிரவனின் கிரணங்கள் பரவி இருளை நீக்குவது போலவும், குளிர்ச்சி பொருந்திய ஒளி நீங்கி தாரகைகள் மறைந்து நிற்கின்ற தன்மை போலவும், பெண்ணாகவும் ஆணாகவும் இரண்டும் அல்லாத ஓர் உருவமாகவும், நம் இறைவன் மிகுந்த ஒளி உடையவனாய் இருக்கிறான். ஆகாயமாகவும், நிலமாகவும், இன்னும் வெவ்வேறு விதமாகவும் கண்களால் பார்த்துப் பருகும் அமுதமாய் திகழ்கின்றான். அப்படிப்பட்ட அவனுடைய வீரக்கழல் அணிந்த திருவடிகளைப் பாடிக் கொண்டு, இந்த அழகிய தடாகத்தில் குதித்து, திளைத்து, நீராடுவோமாக!
http://uk.youtube.com/watch?v=UvPV3d1FXYI
No comments:
Post a Comment